Tuesday, May 1, 2012

குக்கர் கேக்


இப்போ ஒரு 4 வருஷமா தான் ஓவன் ஒரு முக்கியமான தேவையா பார்க்க படுது. சும்மா சொல்ல கூடாதுங்க அரிய கண்டுபிடிப்பு தான்.அதற்காக எல்லார் வீட்டுலயும் ஓவன் இருக்கனும்னு அவசியம் இல்ல. விக்கியுற விலைவாசில அது எல்லோருக்கும் சாத்தியமும் இல்ல. ஓவன் இருக்குற வீட்டுலயும் கரண்ட் பில்லுக்கு பயந்துகிட்டு உபயோக படுத்துறது இல்ல அது வேற விஷயம். இப்போ நம்ப  ஓவன் இல்லாமலேயே எப்படி கேக் செய்யுறதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள் 

மைதா - 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் - 1/2 கப்
ஆப்ப சோடா - 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை ( விருப்பபட்டால் )


செய்முறை 

  • ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சக்கரை அனைத்தையும் சேர்த்து  சலித்து கொள்ளவும்.

  • பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்க்கவும்.

  • பின் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.

  • குக்கரில் ஆத்து மணலை பாதி அளவு கொட்டி அடுப்பில் வைக்கவும். (கண்டிப்பா மணல்  தான் தேவைங்க.வீடு கட்டுவதற்கு உபயோக படுத்தும் மணல் ) 

  • கேக் செய்யும் பாத்திரத்தில் அதாவது கிணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சமா மைதா மாவை தூவவும், இதனால் கேக் ஒட்டாமல் வரும்.

  • கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.

  • இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தையும் வைத்து மூடவும்.
  • விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம்  30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும்.
  • 10 நிமிடம் கழித்து எடுத்து,சூடாக பரிமாறவும்.
குறிப்பு 
  • கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடும். ஆகையால் 25 நிமிடம் கழித்தவுடன், குக்கரை திறந்து இட்லி வெந்து இருக்க என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும்.
  • மாவு  ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது அடுப்பை அனைத்து விடலாம் இல்லா விட்டால் இன்னும் சிறிது நேரம் வைக்கவும்.   
  • குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்குமுன், மணலைச் சூடு செய்ய வேண்டாம். கலவை செய்யும் போதே மணலை அடுப்பில் வைத்தால் நேரம் குறையும் அதனால் கூறினேன்.
  • விசில், கேஸ்கட் இரண்டுமே போடததால் அதிகமான பிரஷர் உள்ளே இருக்காது அதனால் safety value ஒன்றும் ஆகாது.






Friday, April 20, 2012

ஜில் ஜில் கூல் கூல் குல்பி

விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. )


தேவையான பொருட்கள் 
பால் - 1 லிட்டர்
மில்க் மேட் - 3 ஸ்பூன்
சக்கரை - 5 ஸ்பூன்
மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்
குங்கும பூ - 1 சிட்டிகை
பிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5

செய்முறை

  • பாலை நன்றாக காச்ச வேண்டும். பால் நல்லா திக்கான வுடன் நிதானமான தீயில் வைத்து  கொள்ளவும்.

  • குங்குமபூ, சக்கரை, மில்க் மேட் சேர்த்து கிளறவும்.
  • சக்கரை கரைந்தவுடன் பாதாம், பிஸ்தா பருப்பை ஒன்னும் பாதியாகவும் உடைத்து அதனுடன் சேர்க்கவும்.


  • கடைசியாக மைதா மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும். 

  • 5 நிமிடம் கொதிக்க வேண்டும். கஞ்சி போல் வந்து விடும்.
  • இப்பொழுது அடுப்பை அனைத்து விடவும். சூடு அடங்கியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் பிரீசரில் வைக்கவும்.
  • குறைந்தது 6 மணி நேரம் கழித்து பரிமாறவும். ஜில் ஜில்  கூல் கூல் குல்பி தயார்.
குறிப்பு
  • தேவையான பொருட்களில் மில்க் மேட் வீட்டில் இல்லை என்றால் கவலை வேண்டாம், அதற்கு பதில் சக்கரையின் அளவை அதிகமாகி கொள்ளவும். பெரிய மாற்றம் தெரியாது.
  • இனிப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போது  தான் ஐஸ் கிரீம் செட்  ஆனவுடன் சுவைத்தால் செரியாக  இருக்கும். 
  • வீட்டில் கேசர் பாதாம் காம்ப்ளான் (kesar badam flavour complan) இருந்தால் அதையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்  சுவை கூடும்.
  • இதே முறையில் குங்கும பூக்கு பதிலாக  சிறிது வெண்ணிலா எசென்சு சேர்த்தால் வெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.
  • விரைவாக ஐஸ் கிரீம் செட்டாக வேண்டும் என்றால் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். 3 மணி நேரத்தில் செட் ஆகி விடும். 

  • குல்பி மொல்ட்கள் இப்பொழுது அலுமிநியதிலும் கிடைகிறது.


Friday, April 13, 2012

பிசா



பிசா என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. கடைகளில் வாங்கி சாப்பிடும் பிசா நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் நம் வீட்டுலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான, எளிமையான பிசாவை செய்து சாப்பிடுவோமே.....!

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
சக்கரை -  1/2 ஸ்பூன்
உப்பு - 1/௨ ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
ட்ரை யீஸ்ட் (dry yeast) - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பூண்டு-மிளகாய் சாஸ் / தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொடைமிளகாய் - 1
பட்டன் மஷ்ரூம் - 3
துருவிய சீஸ் - 1 கப்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான சூட்டில் பாலை எடுத்து கொள்ளவும்.

  • அதில் ஒரு ஸ்பூன் யீஸ்ட், சக்கரை, உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, பால் கலவை சேர்த்து பிசையவும். இருக்கமாக பிசையாமல் சற்று தலசாக பிசையவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

  • பிசைந்த மாவை மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தல் 3 மடங்காக மாவு மாறி இருக்கும்.
  • கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். கைகளால் மாவை குற்றினால் காற்று வெளியேறி மீண்டும் சிறிதாகி விடும். காற்று அனைத்தும் வெளியேறும் படி நன்கு பிசையவும்.

  • பெரிய உருண்டைகளாக மாவை பிரித்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டவும்.
  • மாவு தலசாக இருப்பதால் மேல் மாவு அதிகமாக சேர்த்து திரட்ட வேண்டும்.இதை பிசா பேஸ் என்பார்கள்.

  • இந்த திரட்டின மாவை ஓவன் தட்டில் வைத்து 450'F சூட்டில் 5 நிமிடம் பேக் செய்யவும்.
  • அதற்குள் வெங்காயம், தக்காளி, கொடைமிளகாய், மஷ்ரூம் அனைத்தையும் நடுத்தரமான அளவில் வெட்டி கொள்ளவும்.
  • படத்தில் காட்டி இருப்பது போல் ஓவனில் மாவு எழும்பி இருக்கும். 

  • இப்பொழுது அதை எடுத்து சாஸ் தடவி காய்கறிகளை விருப்பம் போல் அலங்கரித்து , சீஸை மேலே துவவும்

  • மீண்டும் ஓவனில் 10 நிமிடம் 450 'F சூட்டில் வைக்கவும்.

  • சூடான சுவையான பிசா தயார்.

குறிப்பு 

  • பிசா மாவை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
  • உங்கள் விருப்பம் போல் காய்கறிகளை பயன்படுத்தலாம்.






Sunday, April 8, 2012

பாகற்காய் பகோடா



தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1/4 கிலோ
உப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்ச தூள் - 1/2 ஸ்பூன்
கடலை மாவு  - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

  • முதலில் பாகற்காய் யை கழுவி மெல்லிதாக வெட்டி கொள்ளவும்.   

  • ஒரு பாத்திரத்தில் கொடுக்க பட்டுள்ள மாவு, தூள் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

  • பின்பு நறுக்கி வைத்துள்ள பாகற்காயும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • எண்ணெய் காய வைத்து பாகற்காயை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • எளிமையான சுவையான பாகற்காய் பகோடா தயார்.

Monday, April 2, 2012

பீட்ரூட் அல்வா




தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2
பால் - 1 கப்
சக்கரை - 1/2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி - 5
நெய் - 5 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பீட்ரூட் யை  தோல் சீவி துருவி கொள்ளவும்.

  • வாணலில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் யை  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  • வதக்கும் பொழுதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். சீக்கரம் வதங்கும், சுவையும் அதிகரிக்கும். (எப்பொழுதும் ஸ்வீட் செய்யும் பொழுது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்.)
  • பீட்ரூட் வதங்கியதும் ஒரு கப் பாலையும் அதனுடன் சேர்த்து வேக விடவும். சுமார் 10 நிமிடம் ஆகும்.

  • பால் சுண்டி பீட்ரூட் நன்கு வெந்து இருக்கும் பொழுது, சக்கரை சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது சக்கரை கரைந்து நீர் சேர்த்தது போல் இருக்கும்.

  • பிறகு வாணலில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  • நன்கு சுருண்டு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி, மீதம் உள்ள நெய்,  வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். 

  • சுவையான சத்தான பீட்ரூட் அல்வா தயார். இதற்கு அதிகம் நெய் அல்லது எண்ணெய் குட தேவை படாது.

Thursday, March 29, 2012

இடியாப்பம் ப்ரை




தேவையான பொருட்கள் 

இடியாப்பம் - 4 கப்
பட்டை- 1
லவகம் - 2
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு துருவல் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3
எலும்பிச்சை சாறு- 2 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை 

  • வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சை மிளகாய் யை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

  • வாணலில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவகம், ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு துருவலை சேர்க்கவும்.
  • அது லேசாக சிவந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம்  வதக்கவும்.

  • பிறகு பச்சை மிளகாய், காய்கறி கலவை, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மூடி வேக விடவும்.

  • காய்கறி வெந்த உடன் இடியாப்பமும் சேர்த்து நன்கு கிளறவும்.

  • கடைசியாக எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • தேவை பட்டாள் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும். 




Sunday, March 25, 2012

ரவா பொங்கல்





தேவையான பொருட்கள்

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப 

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

  • இஞ்சி யை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெறும் வாணலில் பயந்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலில் ரவை யையும் 3நிமிடம் வறுத்து எடுக்கவும்.(சிவக்க வருக்க வேண்டாம்)

  • பயத்தம் பருப்புக்கு 2 கப் தண்ணீர், பச்சை மிளகாய், மஞ்ச தூள்  சேர்த்து குக்கரில்  2 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

  • வாணலில் வேகவைத்த பருப்பு அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையும், உப்பு  அதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  • வேற ஒரு வாணலில் நெய் சேர்த்து சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி துண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேக வைத்த ரவை பயத்தம் பருப்புடன் கிளறவும்.
  • சூடான  ரவா பொங்கல் தயார். சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாற மிக சுவையாக இருக்கும்.





Wednesday, March 21, 2012

சௌ சௌ,சுரைக்காய் மசாலா கூட்டு




தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பாசிப் பருப்பு - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கிராம்பு, பட்டை, லவகம் - தலா 1
சௌ சௌ & சுரைக்காய் - 1 கப் (சதுரங்களாக வெட்டியது )
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - 1  டீஸ்பூன்
தனியா தூள் - 2  டீ ஸ்பூன்
மஞ்ச தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை 

  • சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைத்து கொள்ளவும். தக்காளியை 6 துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  பட்டை,கிராம்பு,லவகம் தாளிக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்ச தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்.ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, நறுக்கிய காய்கறி சேர்த்து ஒரு கிளறு கிளறவும். 
  • 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2  விசில் வரை வேக விடவும்.
  • தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து  சேர்க்கவும்.
  • இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை, பூரி உடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு 

  • சுரைக்காய் யை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது, சிறுநீர் நன்கு வெளியேறும்.
  • நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் சௌ சௌ, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.









Monday, March 19, 2012

இஞ்சி குழம்பு


தேவையான பொருட்கள் 

இஞ்சி - 100gm
புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப
கடுகு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 5 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 4
கருவேப்பிலை - தேவைகேற்ப
மஞ்ச தூள் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எண்ணெய் - தாளிக்க

செய்முறை 
1) முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 2) ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

3) பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.


4) வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, துவரம் பருப்பு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்.


5) துவரம் பருப்பு நன்கு சிவந்ததும் மஞ்ச தூள்,அரைத்த இஞ்சி விழுது,புளி கரைச்சல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.


7) குழம்பு பதம் வந்த உடன் இறக்கி விடவும். கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

குறிப்பு:
  • இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
  • ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
  • இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. 
  • கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு.